கோழி வளர்ப்பில் தீவிரம் காட்டும் தல தோனி : ராஞ்சி பண்ணைக்கு வந்து இறங்கிய 2000 கோழிக்குஞ்சுகள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் ஒன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணைக்கு 'கடக்நாத்' இனத்தைச் சேர்ந்த 2,000 கருங்கோழிக்குஞ்சுகளை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து பி.டி.ஐ.யிடம் பேசிய ஜாபுவா மாவட்ட ஆட்சியர் சோமேஷ் மிஸ்ரா, “உள்ளூர் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து தோனி ஆர்டர் செய்த 2,000 'கடக்நாத்' கோழி குஞ்சுகளை அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
தோனி போன்று பிரபலமான ஒருவர் கடக்நாத் கோழி வகைகளில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்த குஞ்சுகளை யார் வேண்டுமானாலும் ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யலாம், இது மாவட்டத்தில் இந்த கோழிகளை வளர்க்கும் பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும்" என்று தெரிவித்தார்.
அதேபோல், ஜபுவாவின் க்ரிஷி விக்யான் கேந்திரா தலைவர் டாக்டர் ஐ.எஸ்.தோமர் கூறுகையில்,
“தோனி சில காலத்திற்கு முன்பு இந்த வகை கோழிக்குஞ்சுகளை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பறவைக் காய்ச்சல் பரவ தொடங்கியதால் கோழி குஞ்சுகளை வழங்க முடியவில்லை.” என தெரிவித்தார்.
மேலும் ஜபுவாவின் ருண்டிபாடா கிராமத்தில் கடக்நாத் தயாரிப்புடன் தொடர்புடைய கூட்டுறவு அமைப்பை நடத்தி வரும் வினோத் மேதாவிடம் தோனி கோழி குஞ்சுகளை வாங்க ஆர்டர் செய்துள்ளார். தற்போது ராஞ்சிக்கு அனுப்பப்பட்டுள்ள 2,000 கடக்நாத் கோழி குஞ்சுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தோனியின் பண்ணை வீட்டில் குஞ்சுகளை வளர்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதால், கோழி குஞ்சுகளை உடனே அனுப்புமாறு தோனியின் மேலாளர் தன்னிடம் கூறியதாக மேதா பிடிஐயிடம் தெரிவித்தார். ஜபுவாவின் பழங்குடி கலாச்சாரத்தின் அடையாளமாக தோனிக்கு ஒரு பாரம்பரிய வில் மற்றும் அம்புகளை பரிசளிப்பதாகவும் மேதா பி.டி.ஐயிடம் தெரிவித்துள்ளார்.
புரதச் சத்துக்கள் நிறைந்த கடக்நாத் கோழியின் முட்டை மற்றும் இறைச்சி மற்ற கோழி இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.