விமான பயணமே இல்லாமல் 203 உலக நாடுகளை சுற்றிப் பார்த்த அதிசய மனிதர் - எப்படி இது சாத்தியமானது?
விமான பயணமே இல்லாமல் ஒருவர் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார்.
விமானம் இல்லாமல் பயணம்
டென்மார்க் நாட்டை சேர்ந்த தோர் பெடர்சன் என்ற 44 வயது சுற்றுலாப் பயணி ஒருமுறை கூட விமானத்தை பயன் படுத்தாமல் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். கால் நடை, பேருந்து, ரயில், படகு மற்றும் கொள்கலன் கப்பல் மூலம் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணித்துள்ளார்.
தனது இந்த லட்சியத்தை முடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு தொடங்கிய அவரின் பயணம் 2023ல் முடிந்துள்ளது. தன் குடும்பம், வேலை மற்றும் உறவினர்களை விட்டுவிட்டு உலகம் முழுவதும் பயணம் செய்யப் புறப்பட்ட டொர்ப்ஜோர்ன் 'தோர்' பெடர்சன் இந்த கற்பனை செய்ய முடியாத சாதனையைச் செய்துள்ளார்.
ஒவ்வொரு தேசத்திலும் குறைந்தது 24 மணிநேரம் செலவிட வேண்டும், ஒரு நாளைக்கு $20 (இந்திய மதிப்பில் ரூ.1600) செலவழிக்க வேண்டும், பயணம் முடியும் வரை வீடு திரும்பக்கூடாது என மூன்று விதிகளை அவர் தனக்கென வகுத்துக் கொண்டாராம். உலகெங்கிலும் உள்ள 203 நாடுகளில் பயணம் செய்ய பெடர்சன் 3,500 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது.
தோர் பெடர்சன் பேச்சு
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த பயணம் அவ்வளவு எளிதில் முடிவடைய வில்லை. தொற்றுநோய்கள் உலகத்தை தாக்கியது. அப்போது இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் சிக்கிக் கொண்டேன். உள்நாட்டு அமைதியின்மை கொண்ட நாடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வெடிப்பு போன்ற தடைகளையும் எதிர்கொண்டேன்.
மேலும் பேசிய அவர் சர்ச்சைக்குரிய பிரதேசங்களுக்கும் தான் விஜயம் செய்துள்ளேன் வரலாற்றில் யாரும் விமானத்தில் பறக்காமல் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முழுமையாகச் சென்றதில்லை என்று தனக்கு தோன்றியதாகவும், அதனாலையே இப்படியொரு பயணத்தை முடித்து காட்ட வேண்டும் என்று எண்ணி இதில் இறங்கியதாகவும் அவர் கூறினார்.