சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்
விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது.
லைகா உத்தரவாதம்
பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் மூன்று வாரங்களில் 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
2 வார கால அவகாசம்
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகி லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை எனவும் ரூ .18 கோடி ஒரே நாளில் நஷ்டம் எனவும், 6 மாதம் ஆனாலும் திருப்பி செலுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி உத்தரவிட்டு , இவ்வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமானப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்