தொடரும் மாணவிகள் தற்கொலை - கடலுாரில் +2 மாணவி துாக்கிட்டு தற்கொலை..!
கடலுார் மாவட்டம் விருதாச்சலம் அருகே ப்ளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஒரு மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் நேற்று திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலையை மூடி மறைத்த பெற்றோர்
இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு இறுதிச்சடங்கு செய்ய முற்பட்டபோது தடுத்து நிறுத்திய போலீசார். மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சரியாக படிக்க முடியவில்லை என மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும், வீட்டில் இருந்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050