பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆபாசம் படம் பார்த்து 4 சிறுவர்கள் செய்த கொடூரம்
2 பள்ளி மாணவர்களுக்கு 4 சிறுவர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
பாலியல் குற்றங்கள்
சமீபத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி மாணவிகள் இருவருக்கு சிறுவர்கள் 4 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள கிராமம் ஒன்றில், 9 மற்றும் 10 வயதுடைய மாணவிகள் 2 பேர், அங்குள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். அதே பகுதியில் 13 மற்றும் 16 வயதுடைய மாணவியின் உறவினர்களான 4 சிறுவர்கள் வசித்து வருகிறார்கள்.
4 சிறுவர்கள்
உறவினர்கள் மற்றும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால், அடிக்கடி இவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவதுண்டு. 4 சிறுவர்களும் சேர்ந்து 2 மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
சில மாதங்களாக இந்த கொடூரம் தொடர்ந்த நிலையில், மாணவிகளின் பெற்றோருக்கு விஷயம் தெரியவர, இது குறித்து குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆபாச படம்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 சிறுவர்களிடமும் நடத்திய விசாரணையில், 4 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து தொடர்ந்து செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பின் அரையாண்டு தேர்வு விடுமுறையில், ஆபாச படத்தில் வருவதைப்போல நடக்க வேண்டும் என மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதன் பின்னர் 4 சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.