விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு..!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று மாலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 21 ரக போர் விமானத்தை பயிற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இரவு 9.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
'அவர்கள் இருவரின் இழப்புக்கும் மிகவும் வருந்துகிறோம். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.' என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அமைச்சர் வேதனை
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படை தளபதி வி.ஆர். சௌத்ரியிடம் பேசியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், 'ராஜஸ்தான் பர்மார் மாவட்டத்தில் ஏற்பட்ட போர் விமான விபத்தில் விமானப் படையின் இரண்டு வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் மறக்கப்படாது.
இந்த கடினமான நேரத்தில், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்.' என்று கூறியுள்ளார்.