பரவிய வதந்தி வீடியோ - திருப்பூரில் 2 வடமாநிலத்தவர்கள் அதிரடி கைது
தமிழ்நாடு தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வதந்தி வீடியோ பரவிய நிலையில் 2 வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிரமாக தேடி தனிப்படை
கடந்த 26 ஆம் தேதி திருப்பூரில் தமிழ்நாடு தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் இச்சம்பவம் பற்றி கூறுகையில் இந்த வீடியோ முற்றிலும் வதந்தி, இது தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என தெரிவித்து இருந்தார்.
மேலும் இது போன்று வதந்தி பரப்புவோர் மீதும், இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்து இருந்தார்.
வடமாநிலத்தவர் இருவர் கைது
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதுாறாக பேசி பிரச்சனை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த சிலரையும் போலீசார் தேடி வருவதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.