பரிசுப் பொருட்கள் அனுப்பி பண மோசடி செய்த நைஜீரியர்கள் - சென்னையில் பகீர் சம்பவம்!
சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி பரிசுப்பொருட்களை அனுப்புவதாக கூறி லட்சக் கணக்கில் மோசடி செய்த 2 நைஜீரியர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
பணம் பறிப்பு
நைஜீரியாவை சேர்ந்த இரண்டு நபர்கள் பேஸ்பூக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களோடு பழகி உள்ளனர். பின்னர் நல்ல அறிமுகமானதும் அவர்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவதாகக் கூறி , அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்களை அனுப்பி உள்ளனர்.
பின்னர் தொடர்பு கொண்டு தடை செய்யப்பட பொருட்கள் உங்களிடம் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்தால் நீங்கள் கைது செய்யப்படீவீர்கள் என்று கூறி உள்ளனர். நாங்கள் சொல்வது போல கேட்கவில்லை எனில் நீங்கள் சிக்கி விடுவீர்கள் என்று கூறி மிரட்டி சென்னையை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
பல முறை நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பேசுகிறோம் என்று தொலைபேசியில் பலரை மிரட்டி பணம் பிரித்துள்ளனர்.
நைஜீரியர்கள் கைது
இந்நிலையில் இதுகுறித்து சென்னை கிழக்கு இணை ஆணையர் திஷா மிட்டல் தலைமை பிரிவு சைபர் கிரைம் தனிப்படையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் இந்த குற்றங்களை செய்பவர்கள் குகோ பிரான்சிஸ்கோ, துரு கிளின்டன் என்ற நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது . மேலும் அவர்கள் அரியானா மாநிலம் பரிதாபாத் தங்கியிருப்பது தெரியவர அரியானா சென்ற போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து மணிப்பூரை சேர்ந்த டபீதா அனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 2 லாப்டாப் மற்றும் ஒரு விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.