2 அமைச்சர்கள் மீதான வழக்கு...3 நாட்களாக தூங்கவில்லை..உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வழக்கின் வரலாறு
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆட்சி வரை திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
அமைச்சர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் விசாரணையை துவங்கியது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
3 நாட்களாக தூக்கமில்லை
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை படித்து விட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது என குறிப்பிட்ட அவர், தீர்ப்பிற்கு ஒரு வடிவத்தை வைத்து கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியதாக தெரிகிறது என்று சுட்டிக்காட்டினார்.
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துபோகவே செய்கின்றனர் என குற்றம்சாட்டிய நீதிபதி, அமைச்சர்கள் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வரும் செப்டெம்பர் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.