எடப்பாடி தொகுதியில் 2 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
அதிமுக கட்சியிலிருந்து 2 நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக கட்சியில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். கட்சிக்கு எதிராகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் நிர்வாகிகளை அதிரடியாக அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2 முக்கிய நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடிபழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளார்.
நிர்வாகிகள் நீக்கம்
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு கழகத்தின் சேலம் புறநகர் மாவட்டம் - எடப்பாடி நகரம் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. M. கந்தசாமி (எடப்பாடி நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) திரு. K. உத்திரராஜ் (எடப்பாடி நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்"