மறைந்த 'சின்ன கலைவாணர்' நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று

ActorVivek oneyear நினைவுநாள் deathanniversary சின்னக்கலைவானர் நடிகர்விவேக்
By Swetha Subash Apr 17, 2022 04:12 AM GMT
Report

சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவுப்பெறுகிறது.

அவரின் திரைப்பயணம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்,

கோவில்பட்டியில் 1961-ம் ஆண்டு பிறந்த நடிகர் விவேக், 1986 - 1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார். 

பின்னர் 1987-ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனி காமெடியனாக புகழ்பெறச் செய்த திரைப்படம் 'காதல் மன்னன்'. இதனை தொடர்ந்து குஷி, தூள், ரன் என பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

மறைந்த

அவர் ஒரு காமெடியனாக வரவேண்டுமென்று சினிமாவுக்குள் வரவில்லை. ஆனால் விதி அவரை இந்தப் பாதையில் பயணிக்க வைத்து எட்டாத உயரத்தை அடைய வைத்தது.

கலைவாணர் என்.எஸ்.கே போல அவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறியவர் விவேக் . நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்ற அன்புப் பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதையும் இதுவரை ஐந்து முறை பெற்றுள்ளார்.

மறைந்த

'உன்னருகே நானிருந்தால்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ள விவேக், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா, சந்தானம், யோகிபாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். 'நான் தான் பாலா', 'வெள்ளைபூக்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

மறைந்த

தமிழ் சினிமாவில் இதுவரை 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ள இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர்.

மறைந்த

மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தார். மேலும், பசுமை காதலனான நடிகர் விவேக் மரம் நடுதலை தன் வாழ் நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கினார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்திருக்கிறார். 

நடிகர் விவேக்கின் நகைச்சுவை திறமை ரசிகர்கள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது. தன்னுடைய நகைச்சுவையில் காமெடி மட்டுமல்லாமல் பல சமூகக் கருத்துக்களையும் சொல்லும் ஒரே நடிகரான விவேக்கின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவர் மறைந்தாலும் இளம்தலைமுறையினரை சிந்திக்க வைத்த அவரின் நகைச்சுவைகளால் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.