நியூயார்க்கில் கோர தீ விபத்து; 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்த சோகம்
நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 9 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“எங்களிடம் 19 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இது நமது வரலாற்றில் மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.
60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் அதில் பாதிபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஐந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பலர் மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் செங்கல் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான கரும் புகை வெளியேறுவதைக் காட்டியது.
மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது வெளியாகி இருந்தது.