கரண்ட் வசதி இல்லாததால் நிகழ்ந்த துயரம் ; வீட்டில் உறங்கிகொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு!
ஒரகடம் அருகே பனையூர் கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே பனையூர் கிராமம் குளக்கரை தெருவில் வசித்து வருபவர் நாராயணன். இவரது இரண்டாவது மகள் தீபா வயது (15) அருகிலுள்ள பண்ருட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு மின்சார வசதி இல்லாத வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது தீபாவை பாம்பு கடித்து உள்ளது. இதையடுத்து நாராயணன் அருகிலுள்ள எழுச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அங்கு பாம்பு கடிக்கு சிகிச்சை இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தீபாவை அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே தீபாவுக்கு வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஒரகடம் போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்துள்ளனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.