ஆன்லைன் வகுப்பில் முடிகளை சாப்பிட்ட மாணவி - அதிர்ந்த குழந்தைகள் ஆணையம்
விழுப்புரம் அருகே ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக மாணவி ஒருவர் முடிகளைப் பிய்த்துச் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஒராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தம், மன சோர்வு, சகிப்புத்தன்மை இன்மை என பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையேவிழுப்புரத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த வாரம், அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர்.
மேலும் சிறுமி பெற்றோர்கள் மூலம் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.