+2 பொதுத்தேர்வை நடத்த வேண்டுமா? வேண்டாமா? உங்க கருத்துகளை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்..!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான +2 தேர்வை ரத்து செய்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.பி.எஸ்.இ. +2 தேர்வை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெளிவு இல்லை என்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள், கல்வியாளர்கள் என்று அனைவரின் கருத்தைக் கேட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என்றும், 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை இன்றும், நாளையும் கேட்டறிந்த பின், பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் எனவும் உறுதியளித்துள்ளார்.