பேன் தொல்லையால் 12 வயது சிறுமி மரணம்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி லக்ஷிபிரியா, 6ம் வகுப்பு படிக்கும் மாணவி.
கடந்த சனிக்கிழமையன்று பூரி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு பேன் தொல்லையால் ஏற்பட்ட தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு அதீத பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டும் பலனில்லாமல் போனதாக லக்ஷிபிரியாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை ரத்தமாக வாந்தியெடுக்கவும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பேன் தொல்லை தீர மருந்தையும், வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்தையும் பரிந்துரைத்துள்ளனர்.
அடுத்த நாள் லக்ஷிபிரியாவின் நிலைமை மோசமடைய உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாய் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் போது தலையில் ஸ்கார்ப் அணிந்து தான் செல்வாள் என்றும், சில நாட்களுக்கு முன்னால் அவளது தலையில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மொட்டை அடித்துவிடலாம் என கூறியபோதும் அவள் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், பேன் தொல்லைக்கு பயன்படுத்திய மருந்தால் அல்லது அதீத பேன் தொல்லையால் தலையை சொறியும் போது ஸ்கால்ப் பாதிப்படைவதால் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம், சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாத போது ஆபத்தாக மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைக்கு பின்னரே இதுதான் காரணம் என உறுதிபட கூறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.