‘நீங்க ரெண்டுபேரும் ஒன்னா இருந்தாலே எனக்கு போதும் பா’ - பெற்றோரை சேர்த்து வைக்க மாணவன் எடுத்த துயர முடிவு!
தாய் - தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி-மேகலா தம்பதி.
இவர்களது மகன் தருண் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் அவர்களின் மகன் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கு முன்பு, கடிதம் ஒன்றை எழுதிவைத்த மாணவன் தனது இறப்பில் தாய் தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும் தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளான்.
`நான் எங்கும் செல்லவில்லை. வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கையில் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
சம்பவம் அறிந்து தருண் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தருண் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தைப் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.