விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசல்; 12 பேர் பலி, 80 பேர் படுகாயம் - பரிதாப சம்பவம்!
கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க விழா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவைக் காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மடகாஸ்கர் தேசிய மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மைதான காவலாளிகளால் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது .
12 பேர் பலி
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் இக்கட்டான நிலையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தோருக்கான மவுன அஞ்சலியுடன் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா தொடர்ந்து நடைபெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு மடகாஸ்கரின் மகாமசினா மைதானத்தில் இதேபோன்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.