எல் நினோ அபாயம்.., தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி எச்சரிக்கை
எல் நினோ காலநிலை தாக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல் நினோ அபாயம்
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படும்.
இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, சில பகுதிகளில் வறட்சியையும் சில பகுதிகளில் கனமழையையும் உருவாக்கும்.
பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது இயல்பை விட அதிகமாக உள்ளன.

தற்போதைய கணிப்புகளின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் எல் நினோ வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் எள் மற்றும் பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.