தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது - மாணவ, மாணவிகள் உற்சாகம்
தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கின. ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட அளவு கால இடைவெளி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.மே 31 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் நடைபெறுகிறது. பொதுத்தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.