கர்நாடகாவில் நாளை தொடங்குகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஹிஜாப் அணிய தடை..!
கர்நாடகாவில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதியில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பள்ளி,கல்லுாரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லுாரியில் படிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லுாரிக்கு வந்தனர்.
இதையடுத்து பள்ளி,கல்லுாரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு பள்ளி,கல்லுாரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிபடுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும்.
மேலும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 8.76 லட்சம் மாணவ - மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுத ஏதுவாக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.