பட்டாசு ஆலையில் கோரவிபத்து; மீட்க முடியாமல் தவிப்பு! 100 பணியாளர்களின் நிலை என்ன?
தென்காசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை விபத்து
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்றும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆலையில் உள்ள குடோனில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ பற்றியதால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது.
பணியாளர்களின் நிலை?
வெடித்ததில் சிதறிய பட்டாசு துண்டுகள் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்து அங்கேயும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால், தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.