நைஜீரியாவில் பயங்கர தீ விபத்து – பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு
நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில், அங்கு பல இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடமாக நைஜீரியா திகழ்கிறது. இந்நிலையில் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளனர், மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத சுத்திகரிப்பு ஆலைகளை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.