10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 103 வயது முதியவர் - 15 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு வயது 103. ஆனால், உடலில் எந்தவித குறைபாடுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்த வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம் தங்கி இருந்தது.
அந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அந்த சிறுமியிடம் பரசுராமன் தாத்தா பாசமாக விளையாடி வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர்களும் தாத்தா தானே.. என்று கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து சாக்லெட் வாங்கிக் கொடுத்து சிறுமியிடம் விளையாடிக்கொண்டிருந்த பரசுராமன், சிறுமியிடம் சில்மிஷம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், அழுதுக்கொண்டே சிறுமி பெற்றோரிடம் சென்று கூறினாள். சிறுமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பரசுராமனை கைது செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிபதி சுபத்ரா தேவி, பரசுராமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.45 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து முதியவர் பரசுராமன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.