கோவையில் 10 வயது சிறுமி கொலையில் 2 பேர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கோவையில் 10 வயது சிறுமி காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இவர், கடந்த வியாழக்கிழமை அன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

திடீரென காணாமல் போன சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தார். பதறிப்போன பெற்றோர் ஊர் முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில், அன்றைய தினமே இரவு 7 மணியளவில் சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். இதனிடையே, பள்ளபாளையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரை அருகே சிறுமி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டவர் காணாமல் போன 10 வயது சிறுமி என்பது உறுதியானது. பின்னர், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மேலும், தடயவில் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 8 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. ரம்ய பாரதி சூலூர் எம்.எல்.ஏ.சுகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
கோவையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
இருவர் கைது

விசாரணையில் சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது வெள்ளிக்கிழமை காலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் கார்த்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த பின்னர் போலீசாரிடம் இருந்து அவர் தப்பிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது, தடுக்கி விழுந்ததில் அவரின் வலது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவரை சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருக்கு வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil