இந்தியாவில் பரவும் ஒமிக்ரான் - பெங்களூரு விமான நிலையத்தில் 10 பேர் தப்பி ஓட்டம்
பெங்களூரு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து விட்டு தலைமறைவான 10 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
இதனிடையே இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முடிவுகள் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே கர்நாடகத்தில் ஓமிக்ரான் அறிகுறி உள்ள இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகு மாயமாகி விட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரை அடுத்த 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் அவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.