"இது வீடா இல்ல..பாம்பு பண்ணையா?” - கலிஃபோர்னியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டின் அடியில் 90க்கும் மேற்பட்ட பாம்புகள் இருக்கின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் அல் வுல்ஃப் என்பவர் சோனோமா கவுண்டி ஊர்வன மீட்பு இயக்கத்தின் இயக்குநராக உள்ளார். இவர் கடந்த 32 வருடங்களாக பாம்புகளை பிடித்து வருகிறார்.எங்கு இருந்து பாம்புகள் இருப்பதாக அழைப்பு வந்தாலும் உடனே சென்று அதனைப் பிடித்து வனப்பகுதியில் விட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டில் பாம்புகள் இருப்பதாக அவருக்கு அழைப்பு வந்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற அல் வுல்ஃப் வீடு முழுவதும் தேடியும் பாம்பு எதுவும் பிடிபடவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் அடியில் தேடிப்பார்க்க முடிவு செய்த போது அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் வீட்டுக்கு அடியில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் விஷப் பாம்புகள் ஆகும். கிட்டத்தட்ட 4 மணி நேரம் போராடி எல்லா பாம்புகளையும் பிடித்த அல் வுல்ஃப் முதல் தடவை பார்க்கும் போதே அந்த வீட்டில் 81 பாம்புகள் இருந்ததாகவும்,, ஆனால் தற்போது பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு இதே வீட்டிற்கு வந்த அல் வுல்ஃப் 59 குட்டி பாம்புகளையும், 22 பெரிய பாம்புகளையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.